புதுதில்லி: அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முதலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இறுதித்தேதி என மத்திய அரசு கெடு விதித்திருந்தது. தற்பொழுது அந்த கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் பொழுது மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நலத்திட்டங்களுக்கான மானியம் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்படுவதால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பயனாளர்களின் செல்போன் எண்களுடனும் ஆதார் எண்களை இணைக்கும் உத்தரவிற்கும் மேற்கு வங்க அரசின் மனுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப் போவது கிடையாது என்று அறிவித்து விட்டார்.
இந்நிலையில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது ஆதார் தொடர்பான பிற வழக்குகளுடன் மேற்கு வங்க மாநில அரசின் மனு, திங்களன்று விசாரணைக்கு வருகிறது.