ஆதாரைக் கட்டாயமாக்குவது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து: சுப்ரமணியன் சுவாமி அதிரடி!

அரசின் திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்குவது எனபது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆதாரைக் கட்டாயமாக்குவது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து: சுப்ரமணியன் சுவாமி அதிரடி!

புதுதில்லி: அரசின் திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்குவது எனபது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முதலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இறுதித்தேதி என மத்திய அரசு கெடு விதித்திருந்தது. தற்பொழுது அந்த கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் பொழுது மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நலத்திட்டங்களுக்கான மானியம் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்படுவதால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடுத்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், 'கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பில் ஒரு மாநில அரசு எப்படி மத்திய அரசின் சட்டத்தினை எதிர்க்கலாம்? இதன் காரணமாகவே மாநில அரசுகள் கொண்டு வரும் சட்டங்களை மத்திய அரசும் எதிர்க்கிறது.' என்று கருத்து தெரிவித்தனர்.

அதே நேரம் மம்தா பானர்ஜி இந்த வழக்கினை ஒரு தனி நபராகவோ  அல்லது குடிமகனாகவோ தொடருவது சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது  அத்துடன் வழக்கில் தங்களது நிலையின் மாற்றிக் கொள்வதற்கு மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

அதே நேரம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க நான்கு வார கால அவகாச மும் அளிக்கப்பட்டுள்ளது.   

அத்துடன் ஆதார் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று காலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

அரசின் திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்குவது என்பது தேசப் பாதுகாப்புக்கு எவ்வாறு ஆபத்து விளைவிக்கும் என்பது குறித்துப் பிரதமர் மோடிக்கு நான்ஒரு கடிதம் எழுதப் போகிறேன்.உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவினை ரத்து செய்யும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி நடத்தும் ஒரு கட்சியின் தகலைவர் இவ்வாறு பேசியுள்ளது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com