புதுதில்லி: நாளை மறுநாள் ஞாயிறு காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பதவி ஏற்ற பின்பு செய்யப்படும் மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும் .
இது குறித்த தகவல் தெரிவித்த குறிப்பிட்ட அரசு உயர் அதிகாரி, 'புதிய அமைச்சர்கள் பதவியேற்பு தொடர்பான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டன' என்று தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சரவை மாற்றத்திற்கு ஏதுவாக இளைய அமைச்சர்களான ராஜிவ் பிரதாப் ரூடி, சஞ்சீவ் குமார் பால்யன், பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் மஹேந்திர நாத் பாண்டே ஆகியோர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் கேபினட் அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய முன் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.