பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு பத்ம விருதுகளை அளிக்குமாறு 4,208 பேர் பரிந்துரை செய்துள்ளனர்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட தனிப்பட்ட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளான இந்த விருதுகளை, யாருக்கு வழங்கி கௌரவிக்கலாம் என்பதை இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் இணையதளம் மூலம் பொதுமக்கள் பரிந்துரைக்கலாம். 2017-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றது.
இதைப் பயன்படுத்தி, ராம் ரஹீமுக்கு பத்ம விருதுகளை வழங்குமாறு 4,208 பேர் பரிந்துரைத்துள்ளனர்.
பரிந்துரைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஹரியாணா மாநிலம், சிர்ஸா நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். அங்குதான் தேரா சச்சா சௌதா அமைப்பின் ஆசிரமம் உள்ளது.
பத்ம விருதுகளில் ஒன்றை வழங்குமாறு தனக்குத்தானே ராம் ரஹீம் 5 முறை இணையதளம் மூலம் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்.
பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீமுக்கு அண்மையில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.