குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக, ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்துக்குச் சென்றார்.
ஆமதாபாத் விமான நிலையத்தில் அவரை மாநில முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஓ.பி.கோலி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ராம்நாத் கோவிந்த் தனது முதல் பயணமாக, நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றார். அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஆசிரமத்தில் மரக்கன்றை நட்டு வைத்த அவர், காந்தியின் ஆவணங்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, அங்குள்ள வருகைப் பதிவேட்டில், ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"மகாத்மா காந்தியின் அகிம்சையும், சத்தியமும் கடந்த காலத்தைப்போல் நிகழ்காலத்துக்கும் தேவையாக உள்ளன. அவருடைய போதனைகள், இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் வலிமையையும் ஊக்கத்தையும் கொடுக்கும் ஆதார சக்தியாக உள்ளது. காந்தி ஆசிரமம் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், நாடுகளுக்கு இடையே அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவதற்கு மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றுவோம் என்று உறுதியேற்போம். ஜெய் ஹிந்த்!' என்று அந்தப் பதிவேட்டில் ராம்நாத் கோவிந்த் எழுதினார்.
அதன் பின் அவர், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மேஹசானாவில் உள்ள சீமந்தார் சுவாமி ஜெயின் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, ராஜ்கோட் அருகே உள்ள ஜாஸ்டன் நகரில் செüராஷ்டிரா}நர்மதா அவதரண் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், அவர் உரையாற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து, ஜஸ்தான் நகரில் உள்ள கெலா சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட இருக்கிறார். குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, ராம்நாத் கோவிந்த் குஜராத் மாநிலத்துக்குச் சென்றது இதுவே முதல் முறையாகும்.