மூத்த குடிமக்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாக மத்திய அமைச்சர்களாகியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த கூறியதாவது:
முன்னாள் அரசு உயரதிகாரிகள் பலரை மோடி தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் தனது அரசியல் சாகாக்களை மோடி நம்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், புதிதாக மூத்த குடிமக்கள் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நமது நாட்டு மக்கள்தொகையின் இப்போதைய சராசரி வயது 27 ஆகும். ஆனால், புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களின் சராசரி வயது 66.44 ஆகும்.
அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் சிலரை வரவழைத்துப் பேசி அவர்களை ராஜிநாமா செய்யுமாறு கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிடும் அவர் பிரதமர் போல செயல்பட்டு வருகிறார் என்றார் மணீஷ் திவாரி.