வட கொரியாவின் ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
வட கொரியா, அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையை ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்த்தியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் இந்த வெடிகுண்டை பயன்படுத்தலாம் என்றும் வடகொரியா கூறியுள்ளது.
அந்நாட்டின் வெடிகுண்டு சோதனைக்கு, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரிய தீபகற்ப பிராந்தியத்தில், அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துக்கு எதிரான செயல்களில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச அமைப்புகளிடம் அளித்த வாக்குறுதிகளை மீறி வடகொரியா மீண்டும் அணு ஆயுதப் பரிசோதனைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலையைத் தரும் விஷயமாக உள்ளது.
கொரிய பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான செயல்களை வடகொரியா தவிர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.