ராதே மா என்ற பெண் சாமியார், இவருக்கு பல தரப்பிலும் பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில், தன்னை கொடுமைப்படுத்தியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர் சுரேந்தர் மிட்டல் என்பவர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அதில் அவர் கூறியதாவது:
இது கடந்த 2 வருடங்களுக்கும் மேலான விவகாரம். இந்த விவகாரங்கள் அனைத்தும் அப்போது ஊடகங்களிலும் வெளியாகின. ராதே மா என்பவரிடம் நான் ஆசி வாங்கச் சென்றபோது அவர் என்னை மயக்கி கொடுமைப்படுத்தினார்.
இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். பின்னர் என்னை சபித்துவிட்டதாக தெரிவித்தார். இதன்பின்னரே அவரின் உண்மை முகம் எனக்கு தெரிய வந்தது. எனவே இதுதொடர்பாக எனது வழக்கறிஞர் ராதே மாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
தற்போது இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தோம். நீதிமன்றம் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
பாபா, சுவாமி என்ற பெயரில் சுற்றித்திரியும் போலிச் சாமியார்களை அடையாளம் காட்டும் விதமாக இந்த முடிவு அமைய வேண்டும் என்றார்.
இந்நிலையில், ராதே மா மீது உடனடியாக முதல் குற்றப்பத்திரிகையை பதியுமாறு பஞ்சாப் காவல்துறைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்கள் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ராதே மா கொடுமைப்படுத்தியதாக கடந்த மாதம் குற்றஞ்சாட்டியிருந்தார்.