கருப்புப் பண முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட பட்டயக் கணக்காளருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8000 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாகவும், கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த முறைகேட்டில் லாலு குடும்பத்துக்கு பட்டயக் கணக்காளர் ராஜேஷ் அகர்வால் உதவியாக இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவரிடம் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, தன்னிடம் விசாரணை முடிந்துவிட்டதால் ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்று கோரி அகர்வால் சார்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும், 2 லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்தி அகர்வால் ஜாமீன் பெறலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.