பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் அப்துல் கயூமுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சம்மன்அனுப்பியுள்ளது. தில்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்தில் புதன்கிழமை அவர் ஆஜராக வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளவர் அளித்த தகவலின்படி அப்துலுக்கு சம்மன்அனுப்பப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு அவர் சில சொத்துகளை வாங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானிக்கு அப்துல் நெருக்கமானவர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் கைதாகவும் வாய்ப்புள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் வன்முறையாளர்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அப்துல் முக்கியப் பங்கு வகித்தார்.