மும்பை: விநாயகர் சிலை கரைப்பின்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை, கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. அதையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தின்போது, புனே, அவுரங்கபாத் உள்ளிட்ட இடங்களில் நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவுரங்காபாத் சிவனை ஏரியில் மூழ்கி 3 பேரும், புனேவில் 4 பேரும், நாசிக் மற்றும் ஜல்காவில் 2 பேரும், பீட் மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். மேலும், அகமதாபாத், சதாரா, பர்பானி ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூஹு பீச், பவாய் ஏரி மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் என மாநிலம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் சிலைகள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 33 ஆயிரம் சிலைகள் கடல் மற்றும் ஏரி, ஆறு, குளங்களில் கரைக்கப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாராஷ்ட்ராவில் நீர் நிலைகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அப்புறப்படுத்தும் பணியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நகராட்சி ஊழியர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.