அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவும், அதனுடன் இணைந்த கூட்டணிக் கட்சிகளான வடகிழக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்ஈடிஏ) அடுத்த ஆண்டுக்குள் ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், சிக்கிம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
எஞ்சியுள்ள திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியும், மேகாலயம், மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
திரிபுராவில் இந்த ஆண்டு இறுதியிலும், மிúஸாரம், மேகாலயம் மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான உக்திகளை வகுக்க தில்லியில் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை என்ஈடிஏ மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது.
அதில், பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளும் 5 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது: பாஜக தலைமையிலான என்ஈடிஏ 5 வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் எஞ்சியுள்ள 3 வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும். ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி அடிப்படை ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமித் ஷா.