விமானத்தை இயக்குவதற்கு முன்பு மது அருந்தியுள்ளார்களா? என்பதை கண்டிபிடிக்க உதவும் ஆல்கஹால் பரிசோதனைக்கு உடன்பட மறுத்த ஏர் இந்தியாவின் 130 விமானிகள், 430 பணிப் பெண்கள் மீது உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரையில் நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
விமானப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதனை இயக்கும் விமானிகளும், பணிப் பெண்களும், விமானம் புறப்படுவதற்கு முந்தைய 12 மணி நேரத்தில் மது அருந்தக் கூடாது என்பது முக்கிய விதியாகும். ஒவ்வொரு விமானம் புறப்படுவதற்கு முன்பு இது தொடர்பாக விமானிகளிடம், பணிப் பெண்களிடம் மூச்சுக் காற்று மூலம் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயமாகும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் ஏர் இந்தியாவின் 130 விமானிகளும், 430 பணிப் பெண்களும் இந்தப் பரிசோதனையை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர். இதனை தீவிரமாகக் கண்காணித்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
விமானிகளும், பணிப் பெண்களும் மது அருந்தியிருந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பரிசோதனைக்கு உடன்பட மறுத்தாலும் விதிகளின்படி 4 வாரங்கள் வரை பணியிடைநீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், இந்த பரிசோதனைக்கு உடன்படாத விமானிகள், பணிப்பெண்கள் மீது விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக, ஏர் இந்தியாவின் முன்னாள் அதிகாரி ஒருவர், ஆல்கஹால் பரிசோதனையைத் தவிர்த்ததால் அவரது விமான ஓட்டும் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.