சண்டிகர்: தேரா சச்சா சௌதா தலைமை அலுவலகத்தில், காவல்துறையினர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருவதால் சிர்சா மாவட்டத்தில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாத புரளிகள் பரவி அதனால் வன்முறை வெடித்து பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் கால்ஸ் தவிர, 2ஜி, 3ஜி, 4ஜி, சிடிஎம்ஏ, ஜிபிஆர்எஸ், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள், டோங்கல் சேவைகள் என செல்போன் தொலைத் தொடர்பு மூலமாக வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் செப்டம்பர் 10ம் தேதி 23.59 மணி வரை முற்றிலும் நிறுத்தப்படும் என்று ஹரியாணா மாநில அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்குக்கும் எந்த ஊறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.