மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 24 குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
அந்த மாநிலத்தில் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இதுபோன்ற சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஷாதல் நகர அரசு மருத்துவமனையில் பிறந்த 36 குழந்தைகள் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தன.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த 94 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனை சிறப்புப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டன. அதில் 24 குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்தன. அந்தக் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போதே மிகவும் உடல்நலம் குன்றியிருந்தன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 60 குழந்தைகள் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மருத்துவமனையில் பிராண வாயு உருளை பற்றாக்குறையாக இருந்ததன் காரணமாகவே அந்தக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.