தேரா சச்சா தலைமையகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு

ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள தேரா சச்சா அமைப்பின் தலைமையகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேரா சச்சா தலைமையகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு


சிர்சா: ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள தேரா சச்சா அமைப்பின் தலைமையகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றங்களி உத்தரவுப்படி, காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன், ஏராளமான அரசுத் துறை அதிகாரிகள் தலைமையகத்தில் தீவிர சோதனையில் ஈடபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் இரண்டாம் நாளான இன்று, சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் மற்றும் தொடர்புத் துறை துணை இயக்குநர் சதீஷ் மெஹ்ரா கூறியுள்ளார்.

இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்க சில வெடிபொருட்களின் பயன்படுத்துவது போன்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 

அதோடு, பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றும், தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 12 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் சில அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. சில கணினி ஹார்ட் டிஸ்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் 35 பேர் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த தேரா அமைப்பின் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த குர்மீத்தின் ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிர்ஸா நகரில் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தேரா அமைப்பின் தலைமையகத்தில் சோதனை நடத்த ஹரியாணா மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள், பலத்த பாதுகாப்புடன் நேற்று சோதனையைத் தொடங்கினர்.

தலைமையக வளாகத்துக்குள் இருந்த கடைகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் 10 என்றும், நீல நிறத்தில் 1 என்றும் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகள் இருந்தன. 

அது பற்றி விசாரித்ததில், இந்த பிளாஸ்டிக் நாணயங்கள், தலைமையத்துக்குள் இருக்கும் அனைத்துக் கடைகளிலும் பணமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், உண்மையான பணம் கையில் இல்லாவிட்டால், இந்த பிளாஸ்டிக் நாணயங்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிளாஸ்டிக் நாணயங்கள் வெளியே எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், தேரா சச்சா அமைப்பினர் தங்களுக்கான தனி விதிமுறைகளுடன் இங்கே வாழ்ந்து வந்திருப்பது வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது.

தேரா தலைமையகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும், காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளாகத்துக்குள் பள்ளிகள், கடைகள், வீடுகள், மருத்துவமனை, ரிசார்ட் என அனைத்தும் உலகப் புகழ்பெற்ற கட்டடங்களின் மாதிரிகளில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட சோதனையில் பிளாஸ்டிக் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com