குஜராத் கலவரம் மோடிக்கு எதிரான வழக்கில் 26ஆம் தேதி தீர்ப்பு?

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில், அப்போது மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி

ஆமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில், அப்போது மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் மனு மீது இந்த மாதம் 26-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் கலவரத்தின்போது ஆமதாபாதில் உள்ள குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி எனுமிடத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை முடித்துக் கொள்வதாகக் கூறி, சிறப்பு நீதிமன்றத்தில்  எஸ்ஐடி கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு கலவரத்தில் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யக்கோரி, பெருநகர நீதிமன்றத்தில் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி மனு தாக்கல் செய்தார். இதை பெருநகர நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜகியா ஜாப்ரி கடந்த 2014-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சோனியா கோகனி முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜகியா ஜாப்ரி மற்றும் எஸ்ஐடி வழக்குரைஞர்கள் தரப்பில், கலவரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளின் நகல்களும், விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஐடி தரப்பில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் நகல்களுடன் சேர்த்து, விசாரணை தொடர்பான அறிக்கைகள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பிறச் சான்றுகள் உள்ளிட்டவையும், விசாரணை நீதிமன்றத்திடம் ஏற்கெனவே அளிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

இதேபோல், நீதிபதி கோகனி உத்தரவின்பேரில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையின்போது கலவர வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்கள், உத்தரவுகள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதி கோகனி, ஜாப்ரியின் மனு மீது வரும் 26-ஆம் தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com