பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தவறான கருத்துகளை மறுபதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுரையில் பிரதமர் மோடியுடன் படத்துடன் பிறர் வெளியிட்ட அந்தப் பதிவை திக்விஜய் சிங் மறுபதிவு செய்ததையடுத்து, அவரை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, அந்த விமர்சனத்துக்கு பதிலளித்து திக் விஜய் சிங் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இன்னொருவரின் பதிவைத்தான் நான் மறுபதிவாக வெளியிட்டுள்ளேன். அது என்னுடைய கருத்து அல்ல. மறுபதிவாக வெளியிடும்போது, அதில் இடம்பெற்றிருக்கும் கருத்துகளை நான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. இதுதான் சுட்டுரையின் அடிப்படைக் கொள்கையாகும்.
அதேபோல், அந்தப் பதிவை என்னுடைய பதிவாக நான் தெரிவிக்கவும் இல்லை. அத்தகைய வார்த்தைகளை நான் பயன்படுத்த மாட்டேன்.
சம்பந்தப்பட்ட நபரிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிறரை முட்டாளாக்கும் கலையில் அவர் கைதேர்ந்தவர் என்பதே எனது கருத்தாகும். இது அவதூறா? என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.