புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், தனது 11 மாத ஆண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்று, அதில் செல்போன், கொலுசு, மதுபானம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, பலராம் முகி என்ற நபர், தனது 11 மாதக் குழந்தையை 25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அதில் 2 ஆயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கியுள்ளார். தனது 7 வயது பெண் குழந்தைக்கு கொலுசும், மனைவிக்கு புடவையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை வைத்துக் கொண்டு மதுபானம் வாங்கிக் குடித்துள்ளார்.
அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது மனைவி சுகுடி-யிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் கொடுத்து குழந்தையை வாங்கிய அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சோம்நாத் சேதி, தனது 24 வயது மகன் 2012ம் ஆண்டு இறந்துவிட்டதாகவும், ஒரே மகனின் இழப்பால் தனது மனைவி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவர் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த குழந்தையை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
குழந்தையை வாங்கிய தம்பதியிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.