உயர்கல்வி நிறுவனங்களில் மிகவும் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. தில்லி ஐ.ஐ.டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
ஐ.ஐ.டிக்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மிகவும் சிறப்பாக பயிலுகின்ற மற்றும் புதியனவற்றை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.75 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதுபோல், 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்பட உள்ளது.
மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் கல்வி உதவித் தொகை அளிப்பது என்பது சிறிய திட்டம் கிடையாது. இந்தியாவில் இதுபோல் மிகப்பெரிய அளவில் உதவித் தொகை முதல்முறையாக தற்போதுதான்அளிக்கப்படவுள்ளது. நமது நாட்டில் இருந்து அறிவுஜீவிகள், பிற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்துக்கு பிரதமரின் கல்வித் உதவித் தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான மத்திய அமைச்சரவையின் குறிப்புக்கு எனது ஒப்புதலை ஏற்கெனவே நான் அளித்து விட்டேன்.
அதுதொடர்பாக பிற அமைச்சகங்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
இதனால் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு மிகப்பெரிய உத்வேகம் கிடைக்கும் என்றும், கல்வியறிவுடைய புத்திசாலிகளை நமது நாட்டிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்புகிறேன். ஐ.ஐ.டி.களில் தற்போது கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 8 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது, 2022-ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக உயரும் என்று நம்புகிறேன்.
பிற அமைப்புகள் மூலமாக, விஷ்வஜித் திட்டத்தின்கீழ் 3 முக்கிய பணிகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.