சட்டப் பேரவைத் தேர்தலின்போது அளித்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து குறித்த தகவலை மறைத்ததாக, பாட்னா நீதிமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் சுரஜ் நந்தன் பிரசாத், இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். அதில், கடந்த 2015ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில், மகுவா தொகுதியில் தேஜ் பிரதாப் போட்டியிட்டபோது, அவுரங்காபாதில் இருக்கும் அவருக்குச் சொந்தமான நிலம் குறித்த தகவலை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்து விட்டார்; அங்கு தனியார் வாகன விற்பனையகம், தேஜ் பிரதாப் யாதவ் குடும்பத்தினரின் நிறுவனம் பெயரில் செயல்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது வரும் 22-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
முன்னதாக, பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடியும், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபோது, அவுரங்காபாதில் தேஜ் பிரதாபுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.