மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினரும், திருவள்ளுவருக்கான மாணவர், இளையோர் அமைப்பின் தலைவருமான தருண் விஜய் புதன்கிழமை நேரில் சந்தித்தார்.
புது தில்லி சௌத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் அவரை சந்தித்து கப்பலுடன்கூடிய பேரரசர் ராஜேந்திர சோழனின் திருவுருவப் படத்தை தருண் விஜய் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது:
தமிழகத்தின் ராஜராஜ சோழனின் வாரிசான பேரரசர் ராஜேந்திர சோழன், இந்திய கடல் பகுதியில் வலிமைமிக்க கப்பல் படையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிய பெருமைக்குரியவர். வட இந்தியாவில் கங்கை கரை வரை தனது ஆதிக்கத்தைச் செலுத்தியவர். அவரது பெருமையைப் போற்றும் வகையில் ராஜேந்திர சோழனின் புத்தாயிரம் இந்திய கடற்படையால் கொண்டாடப்பட்டது. இந்திய அரசு அவரது பெயரில் அஞ்சல் தலையும் வெளியிட்டது.
ராஜேந்திர சோழனின் திருவுருப்படத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கியிருப்பது ராஜேந்திர சோழர் காலத்தில் இருந்து வரும் கடற்படை கப்பல்களின் பலத்தை காட்டுவதாக உள்ளது.
இந்தியாவை உருவாக்க உதவிய மகத்தான ராணுவ வலிமையை நாம் மறக்கக் கூடாது. தென் இந்தியாவின் ராணுவ வலிமை நீண்டகாலம் புறக்கணிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் காலத்தில்தான் தென்னிந்தியாவின் புகழும், வலிமையும் கௌரவிக்கப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாததைவிட மரியாதையும் அளிக்கப்பட்டுள்ளது என்றார் தருண் விஜய்.