ரயில் பயணிகள் எம்-ஆதாரை அடையாளஅட்டையாக பயன்படுத்தலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
ரயில் பயணத்தின்போது எம்-ஆதாரை (மொபைல் ஆதார்) அடையாள அட்டையாக பயணிகள் பயன்படுத்தலாம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட வகுப்புகளில் பயணிக்கும் பயணிகள், எம்-ஆதாரை அதற்கான கடவுச் சொல்லை அளித்து, அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அண்மையில் எம்-ஆதார் எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியின் மூலம், இந்திய பிரஜைகள் தங்களது ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அதாவது, ஆதார் அட்டை பதிவின்போது கொடுக்கப்படும் எண் இருக்கும் செல்லிடப்பேசியிலேயே அதை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த ஆதாரை, ஏதேனும் இடத்தில் அடையாள ஆவணமாக காண்பிக்க வேண்டுமெனில், அந்த செயலிக்குச் சென்று, கடவுச் சொல்லை கொடுக்க வேண்டும். அதன்பிறகே, ஆதார் விவரம் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.