ஸ்ரீஜன் ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
பாகல்பூரில் செயல்படும் ஸ்ரீஜன் மகிளா விகாஷ் சக்யோக் சமிதி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பெண்களுக்கு தொழில்பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் அரசு பணம் கோடிக் கணக்கில் மோசடியாக செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஸ்ரீஜன் ஊழல் விவகாரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊழல் விவகாரத்தை பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல்முறையாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். எனினும், இந்த ஊழலில் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ், இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீஜன் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, திவாகர் யாதவ் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதாவது, இந்த ஊழல் விவகாரத்தை சிபிஐ தனது விசாரணைக்கு கடந்த மாதம் 26ஆம் தேதிக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு, இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, பாட்னா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.கே. உபாத்யாய ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை ஏற்கெனவே சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், சிபிஐ அமைப்பும் தனது விசாரணையை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.