குஜராத் முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலை பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, படேலின் மகன் மறைவுக்கு தனது இரங்கலை மோடி தெரிவித்தார்.
குஜராத் முதல்வாராக மோடி பதவியேற்பதற்கு முன்பு பாஜக சார்பில் அப்பொறுப்பில் இருந்தவர் கேஷுபாய் படேல். 89 வயதாகும் அவர் உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அமெரிக்காவில் வசித்து வந்த படேலின் மகன் பிரிதிவி படேல் (60), கடந்த சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் புல்லட் ரயில் திட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குஜராத்துக்கு மோடி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் காந்திநகரில் உள்ள கேஷுபாய் படேல் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற மோடி, அவரது மகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் மோடியுடன் சென்றிருந்தனர். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள மோடி, பிரிதிவி படேலின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.