தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் ஜப்பானியத் தொழில் நகரங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா - ஜப்பான் இடையேயான 12-ஆவது உச்சி மாநாடு, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அந்நாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியத் தரப்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆசியப் பிராந்தியம் உலக அளவில் பெரும் வளர்ச்சியை எட்டி வரும் புதிய கேந்திரமாக விளங்கி வருகிறது. சர்வதேச அரங்குகளிலும் சரி; உள்நாட்டிலும் சரி, ஒரு யதார்த்தமான உண்மையை நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். 21-ஆம் நூற்றாண்டு, ஆசியாவுக்கான நூற்றாண்டு என்பதுதான் அது.
ஆம், சர்வதேச நாடுகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இடமாக தற்போது ஆசியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் ஆதிக்க சக்தியாக ஆசியா உருவாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அத்தகைய சிறப்புமிக்க இப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் ஜப்பான், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகத் திகழ்கிறது. பரஸ்பர நம்பிக்கையும், நல்லுறவும் இரு நாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மேலோங்கியிருக்கிறது. அந்த பெருமிதத்துடன் ஜப்பானிய மக்களையும், தொழில் நிறுவனங்களையும் இந்தியாவுக்கு அழைக்கிறேன். இந்திய மண்ணுக்கு வந்து எங்கள் மக்களுடன் இணைந்து ஜப்பானியர்கள் பணியாற்ற வேண்டும்; தொழில் முதலீடு செய்து வளர்ச்சியடைய வேண்டும்.
இந்தியாவில் ஜப்பானியத் தொழில் நகரங்கள் அமைப்பதற்கானத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதற்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் அத்தகைய தொழில் நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஜப்பானுக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.
இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இங்கு தொழில் வர்த்தக நடவடிக்கைள் மேற்கொள்ள உகந்த சூழல் நிலவி வருகிறது.
அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வளர்ச்சியை எட்ட வேண்டும். ஏனெனில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை இரு நாடுகளும் தன்னகத்தே கொண்டுள்ளன என்றார் பிரதமர் மோடி.