தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் கனமழை பெய்து வருவதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் புதன்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஹைதராபாத் நகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
குறிப்பாக, நச்சாரம், குகத்பள்ளி, உப்பல், மல்காகிரி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
அதேபோல், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் ஹைதராபாதில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள நிலைமையை சீர்செய்யும் பணிகளில் ஹைதராபாத் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் ஹைதராபாத் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஹைதராபாத் உள்பட தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இன்னும் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.