மத்திய பிரதேசம் நீமுச் என்ற ஊரில் உள்ள ஜெயின் தம்பதியினர் மூன்று வயது மகள் மற்றும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் கைவிட்டு துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சுமித் ரத்தோர் (35) அவரது மனைவி அனாமிகா (34). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களது குடும்பம் அரசியலிலும் வணிகத்திலும் மிகவும் பிரபலமானவை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்கள், இதற்காக மௌனமாக சத்தியம் செய்துள்ளனர்.
தந்தையின் தொழிலை சுமித் கவனித்து வந்த நிலையில், அனாமிகா ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐ.டி துறையில் பணியாற்றினார். கோடீஸ்வரர்களான இவர்களின் குடும்ப சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், குழந்தை, குடும்பம் மற்றும் சொத்துக்களை துறந்து துறவறம் மேற்கொள்வதாக சுமித் ரத்தோர் மற்றும் அனாமிகா அறிவித்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 23-ஆம் தேதி குஜராத் சூரத் நகரில் உள்ள சூத்மார்க்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மஹாராஜின் கீழ் தீக்க்ஷாவை (துறவறம் முதல் படியை) எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அனாமிகாவின் தந்தை அசோக் சண்டலிய்யா கூறுகையில், மகள் மற்றும் மருமகனின் துறவறம் முடிவை தடுக்க முயன்றும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தங்களின் ஆத்ம திருப்தி மற்றும் உள்ளுணர்வு உந்துதலால் இதை செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், "நான் எனது பேத்தியை பார்த்துக்கொள்வேன்," என்று அசோக் சண்டலிய்யா தெரிவித்தார். இவர் நீமுச் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வந்துள்ளார்.
சுமித் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர், சிமென்ட் நிறுவனங்களுக்கான சாக்குகளை தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவர் கூறுகையில், அவர்கள் முடிவை "நாங்கள் எதிர்பார்த்திருந்தோம், ஆனால், இவ்வளவு சீக்கிரம் அல்ல," என்று கூறினார்.
சுமித்தின் உறவினரான சந்தீப் கூறுகையில், "ஒரு மனிதன் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கொண்டிருந்தார். சுமார் 100 கோடி மதிப்புள்ள சொத்து, அன்பான மனைவி மற்றும் மகள் என எல்லாவற்றையும் துறப்பதை கண்டு நாங்கள் வியப்படைந்துள்ளோம் என்று கூறினார்.
இந்தியாவில் 50 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஜெயின் சமூகம், சைவ உணவு உட்பட பலமான வாழ்க்கை முறைகளை பின்பற்றி வருகிறது.