"ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், என்னிடம்தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; மாறாக எனது மகனை துன்புறுத்தக் கூடாது' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் சுமார் ரூ.5,127 கோடி முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, தில்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில் செப்.14-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆஜராகும்படி, அவருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராக மறுத்துவிட்டார். "ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததுடன், வழக்கையும் முடித்துவிட்டது; முடிந்துபோன வழக்குக்காக விசாரணைக்கு ஆஜராக முடியாது' என்று கூறி, கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை.
இந்நிலையில், சுட்டுரையில் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஃப்ஐபிபி) பரிந்துரை செய்த முடிவுகளுக்கு நான் ஒப்புதல் அளித்தேன். எனவே, இந்த வழக்கில், என்னிடம்தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மாறாக எனது மகனை துன்புறுத்துக் கூடாது.இந்த விவகாரத்தில், பொய்யான தகவல்களை சிபிஐ பரப்பி வருகிறது. இது, வருத்தமளிக்கிறது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் முறையானது என்று அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய அதிகாரிகள், சிபிஐ-யிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.