ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் என்பது வெறுக்கத்தக்க ஒன்று என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
வாரிசு அரசியலை நியாயப்படுத்தும் விதமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பேசியதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வெங்கய்ய நாயுடு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கடந்த வாரம் பங்கேற்றார். அப்போது, வாரிசு அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தியாவில் அரசியல்,சினிமா, தொழில்துறை என அனைத்திலும் வாரிசு முறை இருக்கிறது என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் வாரிசு அரசியல் குறித்து அவர் பேசியதாவது:
வாரிசு அரசியல் குறித்த விவாதம் தற்போது அதிகரித்துள்ளது. வாரிசு அரசியலும், ஜனநாயகமும் ஒருசேர பயணிக்க முடியாது. அது, ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பையே பலவீனமாக்கிவிடும். ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் என்பது வெறுக்கத்தக்க ஒன்று. எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு இந்தக் கருத்தைக் கூறவில்லை என்றார் வெங்கய்ய நாயுடு.
தேர்தலில் பண பலத்தை ஒழிக்க வேண்டும்: முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதை ஒழிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் பேசியதாவது: நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டப்பேரவைத் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ அறிவிக்கப்படும்போது, சுமார் ஓராண்டுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனால், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்றார் அவர்.