பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்தது தொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததன் தொடர்ச்சியாக, பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான மகா கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் வெளியேறினார். பின்னர், பாஜகவுடன் புதிய கூட்டணியை அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக அவர் பதவியேற்றார்.
நிதீஷ் குமாரின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியுற்ற லாலு பிரசாத், அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பாகல்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளப் பொதுக்கூட்டத்தில் லாலுவும், தேஜஸ்வி யாதவும் பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது, பிகாரில் நடைபெற்ற ஓர் ஊழல் வழக்குடன் நிதீஷ் குமாரை தொடர்புபடுத்தி, அவர்கள் இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
இதற்கு நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், நிதீஷ் குமார் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்தது தொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு பிகார் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் உதய்கந்த் மிஸ்ரா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதய்கந்த் மிஸ்ராவின் வழக்குரைஞர் வினய் சங்கர் துபே கூறியதாவது: நிதீஷ் குமார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக லாலு, தேஜஸ்வி யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதற்கு, அவர்கள் 15 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும், இல்லையெனில், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார் வினய் சங்கர் துபே.