பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: பிஎஸ்எஃப் வீரர் பலி

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பிஎஸ்எஃப் வீரர்  வீரேந்திர பகதூரின் உடலைச் சுமந்து வரும் அதிகாரிகள். இடம்: ஜம்மு. நாள்: வெள்ளிக்கிழமை.
பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பிஎஸ்எஃப் வீரர் வீரேந்திர பகதூரின் உடலைச் சுமந்து வரும் அதிகாரிகள். இடம்: ஜம்மு. நாள்: வெள்ளிக்கிழமை.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்னியா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள சோதனைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரர் விஜேந்தர் பகதூர் வியாழக்கிழமை நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 12.20 மணியளவில் பாகிஸ்தான் எல்லை காப்புப் படையினர் சிறிய ரக துப்பாக்கிகளால் சுட்டதோடு, ராக்கெட் குண்டுகளையும் வீசினர்.
இதில் விஜேந்தர் பகதூரின் வயிற்றுப்பகுதியில் தோட்டா பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுவம் வழியிலேயே இறந்து விட்டார் என்று பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் படையின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை கடுமையான முறையில் பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியான வீரர் பகதூர் (32), உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் உள்ள வித்யாபவன் நாராய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கு சுஷ்மிதா சிங் என்ற மனைவி உள்ளார்.
பாகிஸ்தான் படையினர் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் கடந்த புதன்கிழமையன்று ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் அளித்த பதிலடித் தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்படும் போர்நிறுத்த மீறல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அவர்கள் 285 முறை அத்துமீறித் தாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் 228 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com