இந்திய விமானப்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங் (98 வயது). இவருக்கு சனிக்கிழமை காலை திடீரென மாரைடப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு மரணடைந்தார். இதையடுத்து அர்ஜன் சிங் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
விமானப்படையில் உயரிய 5 நட்சத்திரங்களை வென்ற ஒரே வீரர் இவர்தான். எனவே அவரை மார்ஷல் ஆஃப் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என்று கௌரவிக்கப்பட்டார். கௌடில்யா மார்க் பகுதியில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அர்ஜன் சிங்கை கௌரவிக்கும் விதமாக முழு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை காலை 9:30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த அர்ஜன் சிங் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படைத் தளபதிகளும் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.