அரசியல் அரங்கில் மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்வைப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமித் ஷா பேசுகையில், "காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் சடலங்களை வைத்து யாத்திரை மேற்கொண்டுள்ளது' என்றார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோரின் தியாகங்கள், வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவர்களின் பங்களிப்பை தெரிந்து கொள்ளாமல், அவர்களை அவமதித்து, மிகவும் தரம் தாழ்ந்த வகையில் அமித் ஷா விமர்சிக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அவரை சிறுமைப்படுத்தி, அவமதித்து வருகிறது. மேலும், ராஜீவ் காந்தியின் உயிர்த் தியாகத்தையும் கொச்சைப்படுத்துகிறது.
அமித் ஷாவும், பாஜக தலைவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் வரலாற்றைத் திரித்து எழுத முயலுகிறார்கள். வரலாற்றையும், சமூகத்தையும் சிதைக்க முற்பட்டவர்களும், வரலாற்றின் புறக்கணிக்கப்பட்ட பக்கங்களில் இடம்பெறுவர் என்றார் ஆனந்த் சர்மா.
இதனிடையே, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.