பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் (படம்) தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டது. இதனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடைவது உறுதியாகிவிட்டது.
பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் ஆட்சி அமைத்ததை அடுத்து, அதிருப்தி அடைந்த சரத் யாதவ் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை சரத் யாதவ் தில்லியில் நடத்தினார். இதில், கட்சியின் செயல் தலைவராக சோட்டுபாய் வசாவா நியமிக்கப்பட்டார். பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் அலி அன்வர், ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர். பிகாரில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட மகா கூட்டணியில் தங்கள் கட்சி தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர்.
கட்சியின் சின்னம் சரத் யாதவ் அணிக்கு தரப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீவாஸ்தவா, "கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோருவதற்கு ஆதரவாக மேலும் பல ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க இருக்கிறோம். காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் எங்களுடன் உள்ளன. விரைவில் எங்கள் கூட்டணி விஸ்வரூபம் எடுக்கும்' என்றார்.
முன்னதாக, பிகாரில் லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து கடந்த 2015-ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. நிதீஷ் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். அதன் பின், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென நிதீஷ் கட்சி வலியுறுத்தியது. இதனை ஏற்க லாலு மறுத்ததை அடுத்து, பிகார் முதல்வர் பதவியை கடந்த ஜூலை மாதம் நிதீஷ் ராஜிநாமா செய்தார். எனினும், உடனடியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் அதிருப்தியடைந்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.