ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் பரிசாக ஆந்திர மாநில விவசாயிகள், 68 பைசாவுக்கான காசோலைகளை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் மாவட்ட பிரச்னை குறித்து மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த விவசாய அமைப்பு, விவசாயிகளிடம் இருந்து 68 பைசாவுக்கான காசோலைகளைப் பெற்று பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.
பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்காவும், நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும், இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரை மத்திய அரசு இந்த விவசாயிகளின் பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை.
எனவே மத்திய அரசின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் வகையில் சுமார் 400 விவசாயிகள், 68 பைசாவுக்கான காசோலைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல், அனந்த்புர், சித்தூர், கடப்பா மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி தங்கள் பகுதி பிரச்னைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.