தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த ராஜஸ்தான் மாநிலம் அல்வர் தொகுதி பாஜக எம்.பி. மஹந்த் சந்த் நாத் (61) காலமானார்.
தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோயால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நோய் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 13-ஆம் தேதி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், மஹந்த் சந்த் நாத்தின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவருக்கு திடீரென மாரடைப்பும் ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மஹந்த் சந்த்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.