ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் உள்ளன: சிபிஐ

ஊழல் வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஊழல் வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட 'லுக் அவுட்' நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கூடுதலாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன; தேவைப்பட்டால், அதை சிலிட்ட உறையில் தாக்கல் செய்ய சிபிஐ தயாராக உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, 'இந்த வழக்கில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் வரையிலும், ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது. வழக்கில் சிபிஐ அமைப்பு தொடர்ந்து ஒத்திவைப்புகளை கேட்டு வருகிறது. இதுவரையிலும் யாரிடமும் விசாரணை நடத்தவில்லை' என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னணி: மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் பதவிவகித்தபோது, தொழிலதிபர் பீட்டர் முகர்ஜி, அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான 'ஐஎன்எக்ஸ்' தொலைக்காட்சி குழும நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றுத் தந்து, அதற்குப் பிரதிபலனாக, தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கார்த்தி, அவரது நண்பர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக மத்திய அரசால் 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தடை விதித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com