பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைப்பதாக இருந்த நிலையில், கங்கை பாசன கால்வாய்த் திட்டச் சுவர் நேற்று உடைந்து கொண்டதால் திறப்பு விழா ரத்து செயப்பட்டது.
பிகார் மற்றும் அருகில் உள்ள ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 22,658 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் விதத்தில், இரு மாநிலங்களும் இணைந்து கங்கை பாசன கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.389.31 கோடியாகும்.
திட்டப்பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டத்தினை துவங்கி வைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள படேஸ்வர்ஸ்தான் என்னும் இடத்தில் நதி நீரை அதற்குரிய குழாய்கள் வழியாக கால்வாய்க்குள் விடும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதில் சீறிப் பாய்ந்து வந்த கங்கை நதி நீரின் வேகம் தாளாமல் பக்கவாட்டு சுவர்கள் உடைந்தன.இதன் காரணமாக நீரானது கஹல்கோன் மற்றும் என்.டி.பி.சி பகுதிகளை சூழ்ந்தது. அங்கு இருந்த நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின.
இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திறப்பு விழா நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது பிகார் அரசுக்கு ஒரு பெரும் தலைகுனிவாகக் கருதப்படுகிறது.