'போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை மாநில அரசு அதிகாரிகளே விசாரிக்கும் வகையில், மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நிதின் கட்கரிக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பான வழக்குகளை, தற்போது நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. இதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகள், அந்த வழக்குகளை விசாரிப்பதற்கு அனுமதியளிக்கும் வகையில், மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
இதுபோல், மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரத்தை நீதிமன்றங்கள் இழக்கும். இதனால், நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை குறையும்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மற்றும் நீதித்துறை கவலையடைந்திருப்பது குறித்து நீங்கள் (நிதின் கட்கரி) நன்கு அறிவீர்கள்.
ஆதலால், இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு, மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகவும், இதில் 80 சதவீத வழக்குகள், கீழமை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் தேக்கமடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கீழமை நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்களில் நிலவும் காலி இடங்களே இதற்கு காரணம் என்றும் அந்த புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.