ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டுமென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் இளைஞர்களின் மனதில் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் இந்திய ராணுவம், சத்பாவனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்படி காஷ்மீர் மாநில இளைஞர்கள் தலைநகர் தில்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, காஷ்மீரின் குரிஸ் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து உரையாடினர்.
அப்போது அவர்களிடம் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், 'இந்திய அரசு தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறது. இளைஞர்களாகிய நீங்கள்தான் உங்கள் மாநிலத்தின் எதிர்காலம். எனவே, மாநிலத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் பணியாற்றவேண்டும்' என்றார்.