ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் உறைகளில் அந்த உணவுப் பொருளின் அளவும், அதை விநியோகிப்பவரின் பெயரும் கட்டாயம் குறிப்பிடப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ரயில்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்களின் உறைகளில், அந்த உணவுப் பொருளை விநியோகிப்பவர் அல்லது ஒப்பந்ததாரர், பொருளின் எடை, அளவு, சிப்பமிடப்பட்ட தேதி, சைவமா அல்லது அசைவமா என்பதைத் தெளிவாக விளக்கும் குறியீடுகள் ஆகியவை இடம் பெற வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
ரயில்களில் விநியோகிக்கப்படும் அனைத்து உணவுப் பொட்டலங்களிலும் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு அவற்றின் விநியோகஸ்தர்கள் அளவுக்கு அதிகமான விலை நிர்ணயிப்பதைத் தடுக்க வேண்டும் என்ற அமைச்சர் பியூஷ் கோயலின் உத்தரவுக் கடிதம் மண்டல பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.