பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அட்டூழியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 22 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அட்டூழியங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கவும், அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 22 மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் அக்டோபர் 13-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கடமையைச் செய்வதிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது என்று அந்த அமர்வு தெரிவித்தது. உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்து விட்டதாக அந்தந்த மாநிலங்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இன்றைய தினமே (வெள்ளிக்கிழமை) அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் அக்டோபர் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. துஷார் காந்தி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்:
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் அரங்கேறும் அட்டூழியங்களை ஒடுக்க தேசிய அளவில் கொள்கை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுப் பாதுகாவலர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், இதுவரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.