கடந்த ஆண்டு மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு 258 கிலோ தங்கம் வாங்கிய நபரை அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் நரசிதாஸ் படேல், தங்கக் கட்டிகளை வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து, ஒரு மாத காலக்கட்டத்தில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி ரூ.84 கோடிக்கு 258 கிலோ தங்கத்தை சந்திரகாந்த் வாங்கியுள்ளதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ரூ.84 கோடி ரூபாயை தங்கம் வாங்கிய இரு நிறுவனங்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளாக அவர் டெபாசிட் செய்துள்ளார்.
மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 41 நாள் இடைவெளியில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் சிறிது சிறிதாக பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சந்திரகாந்த் மீது கருப்புப் பணத்தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.