ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் குமார்துபியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த ஆலையின் வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இந்த தீயானது மளமளவென பட்டாசுகள் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுகடங்காமல் வெடித்து வரும் பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள்
வெளியாகியுள்ளன.
தீ வேகமாக பரவி வருவதால் அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டால் மட்டுமே பலி எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் துல்லியமாக தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.