முன்னாள் மத்திய ரயில்வேத்துறை அமைச்சரும், பீகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமானவர் லாலு பிரசாத் யாதவ்.
கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையில் லாலு பிரசாத் யாதவ் மத்திய அரசின் ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்றுக்கு பயணளிக்கும் விதமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த சமயத்தில் ரயில்வே கேன்டீன்களில் குறிப்பிட்ட தனியார் ஹோட்டலுக்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதன்காரணமாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் செப்டம்பர் 25, 26 தேதிதகளில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் அவர்கள் இருவரின் மீதும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே கேன்டீன் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக 2 வார காலம் அவகாசம் வழங்கும்படி லாலு பிரசாத் யாதவ் தரப்பு வழக்கறிஞர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
எந்த தவறும் செய்யாத தன்னை மத்திய பாஜக அரசும், மாநில நிதீஷ் குமார் அரசும் வேண்டுமென்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இவ்விகாரம் குறித்து லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டினார்.