மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மேற்கு பந்த்ரா நகரில் உள்ள தெருக்களில் தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி இன்று அதிகாலை குப்பைகளை கூட்டி, அள்ளி தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதும் முதன் முறையாக கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு நாட்டில் உள்ள பிரபலங்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர், சமீபத்தில் மக்கள் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை கூட்டி, சுத்தம் செய்து வருகின்றர்.
அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ரா நகரில் உள்ள தெருக்களை இன்று அதிகாலை கூட்டி சுத்தம் செய்தார்.
அவருடன் ஏராளமான பொதுமக்களும் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தனர். “இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க நான் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். அதனால், உங்களது நண்பர்களுடன் ஒன்று சேருங்கள், தெருவையோ வேறு எங்கேயோ சுத்தப்படுத்துங்கள்” என்று சச்சின் கூறினார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக, பிரபலங்கள் மும்பையில் தூய்மைப்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூர்தர்ஷனில் ஏக் பிரேம் கதா, அஸ்ஸம், பாடகர் பாப்பான் மற்றும் நடிகை மத்துரிமா உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
'தூய்மை இந்தியா திட்டம்' குறித்து பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு, சினிமா மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து பிரபலங்கள் 'தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கான ஆதரவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.