காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் குஜராத் பயணம், இங்கு நம்பகத்தன்மை வாய்ந்த உள்ளூர் தலைவர்கள் யாரும் இல்லை என்பதையே காட்டுகிறது என்று அந்த மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான விஜய் ரூபானி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள குஜராத் சதன் (குஜராத் இல்லம்) கட்டடத் திறப்பு விழாவின்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தியின் குஜராத் வருகை என்பது, மாநிலத்தில் காங்கிரஸுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த உள்ளூர் தலைமை இல்லை என்பதை ஒப்புக் கொள்வதாக உள்ளது. அவர்கள் குஜராத்தில் வலுவாக இருந்திருந்தால், ராகுல் அங்கு செல்ல வேண்டி இருந்திருக்காது.
தற்போது நரேந்திர மோடி பிரதமராக உள்ள நிலையில் குஜராத்தில் 150 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்ற நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதேபோல், அடுத்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம் என்றார் அவர்.