விடுதலைப் போராட்ட வீரர்கள் அடைய விரும்பிய 'கனவு இந்தியாவை' உருவாக்க இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஜிஎஸ்டி அமலாக்கத்தை தீவிரப்படுத்தவும், மின்னணு பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்கினர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரதமருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரிகள், பணிரீதியாக தாங்கள் எதிர்கொண்ட முதல்கட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், சுற்றுலா, ரயில்வே பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய திட்டங்களையும் பிரதமரிடம் அவர்கள் விளக்கிக் கூறினர்.
அவற்றை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்த மோடி, அதன் பின்னர் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். திறந்தவெளியில் மலம் கழிக்கும் செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், அந்த இலக்கை அடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
அதுமட்டுமன்றி, ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தவும், மின்னணுப் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.
மேலும், தேசத்தின் நலனுக்காக ஈடில்லாத் தியாகங்களைப் புரிந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் அடைய விரும்பிய 'கனவு இந்தியாவை' 2022-ஆம் ஆண்டுக்குள் உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் வலியுறுத்தினார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.