செல்ஃபி-யின் போது நீரில் மூழ்கி இறந்த மாணவனின் தந்தை கதறல்: பிள்ளையை நினைத்து அல்ல

செல்ஃபி எடுத்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் தந்தை, ஆம்புலன்ஸ் மற்றும் பிரேத பரிசோதனைக்குக் கூட பணம் கேட்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
செல்ஃபி-யின் போது நீரில் மூழ்கி இறந்த மாணவனின் தந்தை கதறல்: பிள்ளையை நினைத்து அல்ல


பெங்களூரு: செல்ஃபி எடுத்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் தந்தை, ஆம்புலன்ஸ் மற்றும் பிரேத பரிசோதனைக்குக் கூட பணம் கேட்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

குட்டையில் மூழ்கி இறந்து கொண்டிருந்த நண்பனைக் கவனிக்காமல், சக நண்பர்கள் 'செல்ஃபி' எடுத்த துயர சம்பவம் பற்றிய செய்திகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகின.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸை தொடர்பு கொண்ட போது, அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. பிறகு ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.5 ஆயிரம் கேட்டார். அவரை விட்டுவிட்டு, தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை பிடித்து அதில் மகனின் உடலை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

மருத்துவமனையில், மகனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பணம் கேட்டார்கள். என்னிடம் இல்லை என்று சொன்னதால், உடலை பிரேதப் பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைக்க கால தாமதம் செய்தார்கள். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் என் மகன் உயிரிழந்து விட்டான். அந்த சோகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் நான், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து பிரேத பரிசோதனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்கிறார் வேதனையோடு.

இதுபோன்ற நடைமுறைகளை மேற்கொள்ள கல்லூரி நிர்வாகம் எனக்கு உதவி செய்யவில்லை. மகனை இழந்த துக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் இப்படி பணம் பிடுங்கும் மக்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அரசு நிச்சயம் இதுபோன்ற சம்பவங்களில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களின் பயணம் குறித்து கல்லூரியிடம் அனுமதி பெறப்படவில்லை என்றும், இதுபோன்ற பயணத்தை திட்டமிட்ட ஒருங்கிணைப்பாளர் கிரீஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஜெயநகர் பகுதியில் நேஷனல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்து சுமார் 25 என்.சி.சி மாணவர்கள் கொண்ட குழு ஒன்று, கடந்த சனிக்கிழமை அன்று கனகபுரா அருகில் உள்ள சோமகுண்டலு குண்டாஞ்சனேயா கோவிலுக்கு முகாம் ஒன்றுக்கு சென்றனர். அவர்களுடன் கல்லூரி பேராசிரியரும், என்.சி.சி அலுவலருமான் ராஜேஷும் உடன் சென்றுள்ளார்.

அவர்களது திட்டபடி ஒரு இரவு அங்கு தங்கி வேலைகள் செய்துள்ள அவர்கள் ஞாயிறு மாலை ஊருக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் மதியம் 2 மணி அளவில் குண்டாஞ்சனேயா கோவிலையொட்டி அமைந்துள்ள குட்டைக்கு அவர்களனைவரும் குழுவாகச் சென்றுள்ளார்கள்.

அங்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து நீரில் விளையாடியும் 'செல்ஃபி' எடுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்கு பிறகு அவர்கள் திரும்ப வேண்டிய நேரம் வந்த பொழுது, என்.சி.சி முறைப்படி 'ரோல் கால்' செய்த பொழுதுதான் விஸ்வாஸ் என்ற மாணவரைக் காணவில்லை என்பது தெரிய வந்தது.

இது பற்றி இந்த வழக்கை விசாரித்து வரும் காகாலிபுரா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

நீரில் விளையாடிய மாணவர்கள் குழுவில் விஸ்வாசும் இருந்துள்ளார். ஆனால் கடைசியில் அவரைக் காணவில்லை என்றவுடன் சக மாணவர்கள் நீரில் இறங்கி தேடியுள்ளனர். அப்பொழுதுதான் சுமார் 10 அடி ஆழத்தில் விஸ்வாஷின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவர் விஸ்வாஷின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு காவல்துறைனர் தெரிவித்தனர்.

பின்னர் ஞாயிறு மாலையில் சக மாணவர்கள் மூலம் விஷ்வாஷின் பெற்றோருக்கு தகவல தெரிவிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை கோவிந்தையா, கல்லூரி நிர்வாகம் உரிய நேரத்தில் தங்களுக்கு தகவலைத்  தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com